எது நிஜம்? படமா! திரையா!

எது நிஜம்?
84 / 100

வெ நாராயணமூர்த்தி

விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவை நம் அன்றாட
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மூன்று விதமான அனுபவங்கள். இதில் எது நிஜம் (what is reality)

சினிமா படம்

சினிமா படக் காட்சியையே பார்த்திராத ஒரு சிறுவனுக்கு, அந்த அனுபவத்தைக் காட்ட
விரும்பினார் அவனுடைய தாத்தா.

அருகில் இருக்கும் திரை அரங்கத்துக்கு ஒரு நாள் அழைத்துச் சென்றார். அங்கே சென்றபோது படக் காட்சி தொடங்கியிருந்தது.

மஹாபாரதக் கதை. ப்ரம்மாண்டமான திரையில் கிருஷ்ணனும் அர்ஜுனனும்
பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு அருகில் பெரிய சேனைகள் போருக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. சிறுவன் தன் வாழ்நாளில் இதை முதல் முறையாகக் காண்கிறான். அதைப் பார்த்து அசந்து போகிறான்.

‘தாத்தா, கிருஷ்ணனும் அர்ஜுனனும் எங்கிருந்து வந்து பேசுகிறார்கள்? அவர்கள்
இங்கேயே இருக்கிறார்களா? அவர்களை நேரடியாகப் பார்ப்பது போலவே
தெரிகிறதே?’ என்று கேட்டான் சிறுவன்.

‘இல்லையடா குழந்தை, இது படக்காட்சி. நீ பார்க்கும் மஹாபாரதக் கதை உனக்கு எதிரே தெரியும் இந்தப் பெரிய திரையில் ஒளிபரப்பப்படுகிறது.’ என்று ஒரு சிறிய விளக்கம் தந்தார் தாத்தா.

கண்ணுக்குத் தெரியாத திரை

சிறுவனுக்கு புரியவில்லை. ‘திரையா? எங்கே இருக்கிறது நீங்கள் சொல்லும் திரை?
இங்கே நான் பார்ப்பது அனைத்தும் நிஜ மனிதர்களாக அல்லவா தெரிகிறார்கள்?’
என்றான் அவன்.

‘நீ பார்க்கும் மனித பிம்பங்களுக்கு பின்னால் தெரிவதுதான் திரை. இன்னும்
சொல்லப்போனால் இந்த திரையில்தான் நீ பார்க்கும் படங்கள் பிம்பங்களாகப்
பிரதிபலிக்கப்படுகின்றன’ என்றார் தாத்தா.

‘நீங்கள் சொல்லும் அந்தத் திரை எங்கே இருக்கிறது? என்னால் பார்க்க
முடியவில்லையே?

ஒரே வேளை அது கிருஷ்ணனுக்கு பின்னால் இருக்கிறதா? அங்கே அர்ஜுனன் அல்லவா நிற்கிறான்? அவனா திரை? என்றான் சிறுவன்.

‘இல்லை இன்னும் பின்னால் பார்’ என்றார் தாத்தா. ‘அப்படியென்றால் அந்த குதிரை,
யானை சேனைகளா திரை?’. இல்லை இன்னும் பின்னால்’. நீலமாகத் தெரியும்

வானமா?’ இல்லை இன்னும் பின்னால்’, என்று தாத்தா சொல்ல இந்த விளக்கம்
தொடர்ந்தது.

தெரிந்தது திரை

சிறுவனுக்கோ புரியவில்லை. ‘எனக்கு நீங்கள் சொல்லும் திரை தெரியவில்லையே
தாத்தா’ என்று சங்கடப்பட்டான் சிறுவன். ‘கொஞ்சம் பொறு’ என்று சமாதானப்
படுத்தினார் தாத்தா.

சிறிது நேரத்தில் படக்காட்சி நின்றது. இடைவேளை நேரம். அருகில்
அமர்ந்திருந்தவர்கள் வெளியே செல்ல ஆரம்பித்தனர். அரங்கத்தில் விளக்குகள் பிரகாசிக்கத் தொடங்கின.

அப்போதுதான் முதல் முறையாக தன் முன்னே அந்த வெள்ளைத் திரையைக்
கண்டான் சிறுவன்.

‘அட, நான் இதுவரை பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?

இவ்வளவு நேரம் புலப்படாத இந்தத் திரை இப்போது எங்கே இருந்து வந்தது?’ என்று ஆச்சர்யத்துடன் பார்த்தான். கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினான்.

இடைவேளை முடிந்து மீண்டும் படக்காட்சி தொடங்கியது. கதை தொடர்ந்தது.
மனிதர்கள் வந்தார்கள், கடவுளர்கள் வந்தார்கள், பேசினார்கள், பாடினார்கள்,
அழுதார்கள், சிரித்தார்கள், மாபெரும் போர் நடந்தது.

ஆனால் சிறுவனுக்கோ கதை மேல், உருவங்கள் மேல் முன்பிருந்த நாட்டம்,
ஸ்வாரஸ்யம் இப்போது இல்லை. வேறுபாடு தெரிந்தது.

எது நிஜம்?

சிறுவன் புத்திசாலி. தன் கேள்விகளை நிறுத்திவிட்டான். கதையையும் மறந்தான். தெரியும் உருவங்களை மறந்தான். அவைகளை விலக்கி, இந்த பிம்பங்களுக்கு பின்னே, காட்சிகளுக்கு பின்னே மறைந்திருக்கும் திரையை ஆராயத் தொடங்கினான்.

காட்சி தெரியும்போது திரை மறைந்து விடுகிறது. அது கண்ணுக்குத் தெரிவதில்லை, காட்சிகள் மறைந்தவுடன் திரை மட்டுமே நமக்குத் தெரிகிறது.

திரை இல்லாவிட்டால் இந்தக் காட்சிகளே இல்லை, தத்ரூபமாகத் தெரியும் இந்த மனிதர்களும், கடவுளர்களும் நமக்கு தெரியமாட்டார்கள்.

‘ஆக, நான் காண்பது திரையின் மேல் பிரதிபலிக்கும் பிம்பங்களின்
மாயாஜாலம். தற்போது எது நிஜம்?

நிஜத்தில் நடக்காத சம்பவங்களை, இப்போது நடப்பதுபோல் தத்ரூபமாக காட்டுகிறது இந்தத் திரை. இதுதான் நிஜமோ?

ரூபங்கள் வெறும் மாய தோற்றங்கள், காட்சி முடிந்தவுடன் அனைத்தும்
மறைகின்றன. எது நிஜம்? இதுதான் நிஜம் என்று உணர்ந்தான். தெளிவு பிறந்தது. இந்த
உண்மையை உணரவைத்த தன் தாத்தாவுக்கு நன்றி சொன்னான்.

எது நிஜம்? ரொம்ப அழகான கதை. எதற்கு என்னிடம் சொன்னீர்கள்? என்று அப்பாவித்தனமாகக் கேட்டார் நண்பர்.

நாமும் சினிமா திரையும்

ஐயா, அந்தச் சிறுவனும், திரை அரங்கமும், திரையும் நம்மோடு சம்பந்தப்பட்டவை என்றதும் நண்பருக்கு இப்போது ஆச்சரியம் ஏற்பட்டது.

படக்காட்சியை திரையில் பார்ப்பதைப் போல நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள இந்த
உலகையும் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். தொடர்ந்து காட்சிகள் நடைபெறுகின்றன. பகல் காட்சி, இரவுக் காட்சி என்று மாறி மாறி வருகின்றன.

எது நிஜம்?

விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவை நம் அன்றாட
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மூன்று விதமான அனுபவங்கள். இந்த மூன்று விதமான
அனுபவங்களையும் ஒளிர்விக்கும் திரைதான் உண்மையான ‘நாம்’.

திரைக்கும் அதில் ஒளிரும் பிம்பங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம் உடல்
புலன்கள் திரையில் தெரியும் உருவங்களையெல்லாம் பார்க்கின்றனவே தவிர
திரையைப் பார்ப்பதில்லை.

திரைக்கும் அதில் காணும் பிம்பங்களுக்கும் வேறுபாடு தெரியும்போது நிஜத்துக்கும் தோற்றங்களுக்கும் வித்தியாசம் புரிகிறது.

ஒளிரும் பிம்பங்களைத்தான் நம் புலன்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று
நவீன விஞ்ஞானம் நம்மை மேலும் குழப்புகிறது. ஆனால் இதுவல்ல உண்மை
என்கின்றன வேதங்கள்.

என்ன சொல்கிறீர்? என்று அதிர்ச்சியுடன் கேட்டார் நண்பர். ஆமாம். கொஞ்சம்
யோசித்துப் பாருங்கள்.

இது எப்படி சாத்தியம்?

வெளிச்சமே இல்லாத ஒரு இடத்தில், அதாவது செயற்கையாக ஒளியோ அல்லது ஒலியோ புகாத இடத்திலும் நம்மால் ‘நம்மை’ நாம் இருப்பதை
உணரமுடிகிறது. இது எப்படி சாத்தியம்? கடஉபநிஷதம் இந்த ஸ்லோகத்தின் வழியாக இதை விளக்குகிறது:

நதத்ர சூர்யோ பாதி
நசந்த்ர தாரகம்
ந இமஹ வித்யதோ பாந்தி
குட அயம் அக்னிஹி
தமேவ (தம ஏவ) பாந்தம்
அனுபாதி சர்வம்

தஸ்ய பாஸ
சர்வமிதம் விபாதி

நம் புலன்கள் வழியாக நாம் உணரும் அனைந்து உணர்வுகளுக்கும் ஒளி தருவதுதான்
ஆத்மன். இது தெய்வீக சக்தி. உண்மையான ‘நாம்’.

ஆனால் நாமோ இந்த உடல், உள்ளம், புத்தி, அஹம்காரம் கலந்த கலவைதாம் நாம் என்று தவறாக கற்பனை செய்துகொண்டு அறியாமையில் வாழ்கிறோம்.

வெளியே ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் ஸூர்யன் எப்படி இருளைப் போக்கி
பொருள்களை அடையாளம் காட்டுகிறானோ, அதுபோல சதா
ஒளிர்ந்து கொண்டிருக்கும் நம் ஆத்மன் வெளியில் காணும் பொருள்களுக்கு ஒளி தந்து
நம் மனத்திரையில் பிம்பமாக உணர்த்துகிறது என்கிறது வேதங்கள்.

நாம் யார்?

வெளியில் இருந்து வரும் ஒளி நமக்கு பொருள்களைக் காட்டுவதில்லை. நம் ஸ்வயம் ஜோதிதான் வெளிஉலகத்துக்கே ஒளி தந்து, இன்னும் சொல்லப்போனால் நமக்கு வெளியில் தெரியும் ஸூர்யனையே அடையாளம் காட்டுகிறது!

நம் திரையில் தோன்றும் தோற்றங்களே இந்த உலகம் (இந்த உடலையும் சேர்த்து). நம்
ஆத்மஜோதி ஒளிர்ந்து உணர்த்தாவிட்டால் எந்தப் பொருள் உணர்வும் நமக்கு
இருக்காது. உண்மையில் நாமே நாம் காணும் இந்த உலகிற்கெல்லாம் ஒளிதரும்
ஸூர்யன்.

இங்கே யோசித்துப் பாருங்கள். அன்றாட வாழ்க்கையில், திரை அரங்கமும் நாமே,
திரையும் நாமே. திரையில் ஒளிரும் பிம்பங்களைக் கண்டு, அவையே நிஜம் என்று
தவறாக ஏற்றுக்கொண்டு அசந்து போகிறோம். பிம்பங்களுக்கு ஏற்படும் தொல்லைகள்
அனைத்தும் நம்முடையது என்று ஏற்றுக்கொண்டு அவதியுறுகிறோம்.

இந்த மறைந்திருக்கும் திரையை நம்மால் உணரமுடிவதில்லை. அந்தச் சிறுவன்
தேடியது போல நம்மில் பெரும்பாலோர் திரையைத் தேடுவதில்லை.

திரையைக் காணமுடியாத நாம் வெளிஉலகம் காட்டும் திரைப்படம் ஒன்றே நிஜம் என்று எண்ணி படக்காட்சியில் வரும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளோடு உறவாடி,
உண்மையில்லாத பிம்பங்களோடு ஒன்றிப் போகிறோம்.

அவைகளே உண்மை, அவை நம்முடையவை என்று சந்தோஷப்படுகிறோம் அல்லது வருத்தப்படுகிறோம்.

மனிதப் பிறவியின் நோக்கம்

நம் முன் தெரியும் திரைக் காட்சிகளையும், கதா பாத்திரங்களையும் விட்டு விலகி,
உண்மையான திரையே நாம்தான் என்ற தெளிவு வரும்போது மூன்று நிலை அனுபவங்களின் வெளிப்பாடுகளான துக்கம், சோகம், சந்தோஷம், இஷ்டங்கள், கஷ்டங்கள் ஆகியவையெல்லாம் நம்மை விட்டு விலகி நிற்கின்றன.

அவை வெறும் தோற்றங்களே, அவை நிரந்தரமற்றவை, நம்மோடு
தொடர்பில்லாதவை என்று புரிகிறது.

உடனே தோற்றங்களைச் சேர்ந்த அனைத்தும் (நல்லவை, கெட்டவை) மறைகின்றன. தோற்றங்களை விட்டு விலகி நாம் உண்மையான தெய்வீக நிலையை உணர்வதுதான் மனிதப் பிறவியின் நோக்கம்.

இதுதான் உண்மையான விடுதலை. பற்றட்ட நிலை. ஆழ்ந்த அமைதி, பேரானந்தம்,
சாந்தம். ‘வாழும்போதே மோக்ஷம், முக்தி’ என்று வருணிக்கின்றன வேதங்கள்.

இந்த விளக்கம், தெளிவு அனைத்தும் சாதாரணமாக அனைவருக்கும் கிடைப்பதில்லை.
எப்படி அந்த சிறுவனுக்கு அவனுடைய தாத்தா தெளிய வைத்தாரோ அதேபோல
தாத்தா எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

நமக்குள் ஆத்மலிங்கமாக மறைந்திருக்கும் இந்த திரை உண்மையை ஒளிர்வித்து காட்டுவதே ஜோதிர்லிங்கம். 13-ஆவது ஜோர்லிங்கமான ஸ்ரீ ஸூர்யநந்தீஸ்வரர் திருக்கோவிலும் இந்த ஆத்ம தத்துவத்தைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனாலும் இந்த தேவ ரகசியத்தை பல பேரால் உணரமுடிவதில்லை.

காயத்ரி மந்திரத்தின் ரகசியம்

கூகுளுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர்

84 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *