பெரியோர் அழகு எது?: திருக்குறள் கதை 1

Thirukural kathaigal பெரியோர்க்கு அழகு
83 / 100

குறளமுதக் கதைகள் வரிசையில் முதல் திருக்குறள் கதையாக பெரியோர் அழகு எது? என்பதை தெளிவுபடுத்தும் கதையும், அதற்கான திருக்குறள் விளக்கத்தையும் பார்க்கலாம்.

ஆசிரியரை தேடி வந்த மாணவன்

மாயவன் காவல் துறைக் கண்காணிப்பாளர். தன் சொந்த ஊருக்கு ஆறு மாதம் முன்பு மாற்றலாகி வந்தவன்.

ஒரு நாள் அவன் தன் ஆசிரியர் பரமசிவத்தைத் தேடி வந்தான். என்ன கொடுமை! வயதான காலத்தில் தன்னுடைய ஆசிரியர் தனிமையில் வாடுவதைக் கண்டு வேதனைப்பட்டான்.

தன்னை காண வந்த மாயவனை பார்த்து… பரமசிவமோ யார் நீங்கள்… உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லையே.. என்றார்.

உடனே “மாயவன் என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை? உங்கள் மகன் அன்புவின் நண்பன் மாயவன்தான் நான்” என்று சொன்னான்.

ஓ… மாயவனா… வயதாகிவிட்டதல்லவா… அடையாளம் தெரியவில்லை என்றார் பரமசிவம்.

நன்றி பெருக்கு

அய்யா… உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள்தான் என்னுடைய உயர் படிப்புக்கு உதவி செய்தீர்கள். அதனால்தான் இன்றைக்கு நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று நன்றியோடு சொன்னான் அவன்.

“ஏதோ என்னால் அப்போது முடிந்ததை செய்தேன்” என்றார் பரமசிவம்.

அய்யா… வாங்க என் வீட்டுக்கு போய்ட்டு வரலாம் என்று உரிமையோடு அவரை அழைத்து தன் காரில் அமர வைத்து வீட்டுக்கு அழைத்து வந்தான்.

நீங்கள் என் தந்தை போன்றவர். உங்களிடம் ஒன்று கேட்கலாமா.. தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்களே என்று பீடிகை போட்டான்.

சொல்லுப்பா.. என்று அவனுடைய முதுகில் செல்லமாகத் தட்டினார் பரமசிவம்.

தனிமைக்கு காரணம் என்ன?

அய்யா, மனைவியும், மகனும் உங்களோடு இல்லையா? என்று கேட்டான்.

அவர் நீண்ட பெருமூச்சுக்கு பிறகு அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லத் தயாரானார்.

உன் நண்பன் அன்புவை உயர் படிப்பு படிக்க வைத்தேன். அவனும் நல்ல நிலைக்கு உயர்ந்தான். திருமணமும் நடந்தது. எனக்கு ஓய்வூதியம் வருவதால் அது போதும் என்று சொத்துக்களை அவன் பெயருக்கு மாற்றினேன்.

அவன் சிறிது காலத்தில் என்னையும், என் மனைவியையும் தனிமையில் விட்டுவிட்டு, வெளியூர் சென்றுவிட்டான். அவன் எங்கிருக்கிறான் என்பது கூட எனக்கு தெரியாது.

அன்பு மீது அதீத பாசம் வைத்திருந்த என் மனைவி, படுத்த படுக்கையானாள். சில நாளில் அவர் மறைந்தும் போனாள். அப்போதும் கூட என் மகன் வரவில்லை.

அதனால்தான், தள்ளாத காலத்தில் தனிமையில் நான் வாழ வேண்டியதாகி விட்டது என்றார் கண்கலங்க பரமசிவம் ஆசிரியர்.

மாயவன் மனைவி

இதைக் கேட்ட மாயவனும் கண் கலங்கினான். இவர்களின் பேச்சுக் குரலை கேட்டு வந்த மாயவனின் மனைவியும் இந்த உரையாடலைக் கேட்டு கண் கலங்கினாள்.

அவளை பார்த்த மாயவன், இவர்தான்… என்று சொல்லத் தொடங்கும் முன்பே… அவள் சொன்னாள்… உங்கள் உயர் படிப்புக்கு உதவிய ஆசிரியர்தானே என்றாள்.

ஆமாம்… என்று தலையாட்டினான் மாயவன்.

அப்போது மாயவன் மனைவி சொன்னாள். “அய்யா… என் வீட்டுக்காரரும் உங்கள் மகன் மாதிரித்தான். இனிமேல் இங்கே தங்கியிருங்கள்” என்றாள்.

திருக்குறள் கதைகள் -  பெரியோர்

அதை ஆமோதித்த மாயவன் சொன்னான். உங்கள் மகன் எங்கிருந்தாலும் அவனை நான் கண்டுபிடித்து அவனோடு சேர்க்கிறேன். அதுவரை இங்கேயே தங்குங்கள் என்றதை கேட்ட பரமசிவம் தனிமையில் இருந்த தனக்கு ஒரு ஆதரவு கரம் நீட்டப்பட்டிருப்பதைக் கண்டு மீண்டும் கண் கலங்கினார்.

பெரியோர் அழகு எது?

பேச்சை மாற்றுவதற்காக மாயவன், அங்கே படித்திக் கொண்டிருந்த தன் மகனை பார்த்து என்ன படித்துக் கொண்டிருக்கிறாய் என்று. அவன் சொன்னான். அப்பா திருக்குறளில் செய்நன்றி அறிதல் அதிகாரத்தில் உள்ள பாட்டை படித்துக் கொண்டிருந்தேன் என்றான்.

என்ன குறள்… சொல்லேன்… நாங்களும் கேட்கிறோம் என்றார் பரமசிவம்.

“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு”

அதாவது, “தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழ் பிறவிகளிலும் நினைத்துப் போற்ற வேண்டும். அதுவே பெரியோர் அழகு” அப்படின்னு சொன்னான் சிறுவன்.

பெரியோர் அழகு என்ன என்பதை உணர்ந்திருக்கும் அவன் உன்னைப் போலவே உயர்வான் என்றார் பரமசிவம்.

83 / 100

One thought on “பெரியோர் அழகு எது?: திருக்குறள் கதை 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *