அரசியல்வாதிகள் என்றாலே கட்-அவுட் கலாசாரத்தை ஊக்குவிப்பவர்களாக இருப்பர். அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் சினிமா நடிகர்களும் இதில் விதிவிலக்கானவர்கள் அல்ல.
இதை மையமாக வைத்து ஒரு சிறிய நகைச் சுவை கதை இது.
ஒரு விமானத்தில் அரசியல்வாதி, மதவாதி, சமூக ஆர்வலர், பொருளாதார நிபுணர், சினிமா நடிகர் ஆகிய 5 பேர் பயணம் செய்தார்கள்.
விமானம் நடுவானில் என்ஜின் இயங்காமல் நின்றுபோய்விட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்தவர்களை விமானி எச்சரித்தார்.
விமானம் மெல்ல கீழே விழுந்து கொண்டிருக்கிறது. இந்த சிறிய விமானத்தில் 4 பாராசூட்டுகள் இருக்கின்றன.
உங்கள் 5 பேரில் யாராவது 4 பேர் அதன் மூலம் உயிர் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதைக் கேட்ட சினிமா நடிகர் நான் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றை முடித்து கொடுக்காவிட்டால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவார்கள்.
மக்கள் ஏமாற்றமடைவார்கள். அதனால் நான் ஒரு பாராசூட் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி அதை எடுத்துக் கொண்டு குதித்துவிட்டார்.
மதவாதியோ, இன்னும் மக்களுக்கு நல்ல பல கருத்துக்களை நான் சொல்ல வேண்டியிருக்கிறது.
நான் இப்போது செல்லும் நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி ஒரு பாராசூட்டை எடுத்துக் கொண்டு குதித்துவிட்டார்.
பொருளாதார நிபுணரோ, என்னுடைய ஆலோசனையை நம்பியை என்னுடைய நாடு இருக்கிறது. நான் ஒருவேளை இறந்துவிட்டால், நாடே பாதிக்கப்பட்டுவிடும்.
அதனால் நான் ஒரு பாராசூட் எடுத்துக் கொள்கிறேன் என்று அவரும் எடுத்துக் கொண்டு குதித்து விட்டார்.
அரசியல்வாதியோ, நான் இந்த சமூகத்துக்கு தேவையானதையெல்லாம் செய்து முடித்து விட்டேன்.
இப்போது நான் சேர்த்திருக்கும் கோடிக்கணக்கான மதிப்பு சொத்துக்களுடன் சுகமாக வாழ ஆசைப்படுகிறேன் என்று சொல்லிவிட்டு அவருக்கு ஒரு பாராசூட்டை எடுத்துக் கொண்டு குதித்து விட்டார்.
கடைசியாக ஒரு பாராசூட் மிச்சம் இருந்தது. இதை பார்த்த சமூக ஆர்வலர், மீதம் ஒரு பாராசூட் இருக்கு. நீங்க 4 பாராசூட்டுதான் இருக்குன்னு சொன்னீங்களே என்று விமானியை பார்த்து கேட்டார்.
விமானி அதை பார்த்துவிட்டு, அடடா… ஒரு தவறு நேர்ந்துவிட்டது. கடைசியாக குதித்த அரசியல்வாதி அவசரத்தில் பாராசூட் இருக்கும் இடத்தைக் காட்ட வைக்கப்பட்டிருந்த பாராசூட் கட்-அவுட்டை எடுத்துக்கொண்டு குதித்துவிட்டார்.
அதனால் அந்த பாராசூட்டை எடுத்துக்கொண்டு நாம் இருவரும் குதித்துவிடுவோம் வாருங்கள் என்று சமூக ஆர்வலரிடம் சொன்னார் விமானி.