Short story 5: மனிதனை விட மிருகம் மேலானது!

சிறுகதை 5
73 / 100

மனிதரில் ஆயிரம் குணமுடையவர்கள் உண்டு. அவர்களில் நன்றி மறந்தவர்களும் ஒரு இனம். அப்படிப்பட்ட மனிதர்களை விட ஆபத்தான மிருகம் மேலானது என்பதை உணர்த்தும் கதையாக இந்த சிறுகதை (short story 5) அமைகிறது.

மன்னிக்க தெரியாத அரசன்

ஜெயபாதம் என்ற நாட்டை வித்யாதரன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் யார் சிறு தவறு செய்தாலும் மன்னிக்க மாட்டான்.

தவறுக்கான தண்டனையாக அவன் பாதாள அறையில் வளர்த்து வந்த சிங்கத்துக்கு இரையாக்குவதை வழக்கமாக வைத்திருந்தான். இதனால் மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகி இருந்தார்கள்.

மன்னருடைய விசுவாசிகளும் கூட அவன் சொல்வதற்கெல்லாம் ஆமாம் என்று சொல்வார்களே ஒழிய தவறாக இருந்தால் தவறு என்று சொல்ல மாட்டார்கள்.

அவனுடைய உறவினர்கள் தவறு செய்தாலும் கூட சிங்கத்துக்கு இரையாக வேண்டியதுதான்.

சமையல் கலைஞர்

அந்த அரசன் சிறு வயதாக இருந்தபோதே அரண்மனையில் தவசு என்ற சமையல்காரன் பணியில் இருந்தான். அவனுடைய உணவு அரசன் வீட்டைச் சேர்ந்த அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தது.

அதனால் அவன் வயதான காலத்திலும் வித்யாதரன் அரண்மனையில் சமையல் வேலை செய்து வந்தான்.

தவசுக்கு வயது மூப்பு காரணமாக ஞாபக மறதி ஏற்படத் தொடங்கியது. அதனால், அரசன் வித்யாதரனை சந்தித்து தன்னுடைய இயலாமையை சொன்னான்.

இருந்தாலும், வித்யாதரன் அவனுக்கு ஓய்வு கொடுக்க விரும்பவில்லை. அதனால் வேறு வழியின்றி வித்யாதரனுக்கு சமையல் கலைஞனாக தவசு தொடர்ந்து இருந்து வந்தான்.

தவசுக்கு தண்டனை

ஒரு நாள் அரசனுக்கு சமைத்த உணவில் உப்பு போட மறந்துவிட்டான். அதனால் அந்த உணவு ருசியாக இல்லை.

ஆத்திரமடைந்த அரசன், தவசுவை கூப்பிட்டை உணவை ருசி பார்க்கச் சொன்னான். அதை ருசி பார்த்தபோதுதான் உணவில் உப்பு போட மறந்துவிட்டது தெரியவந்தது.

உடனே, உப்பை போட்டு சரிசெய்து மீண்டும் உணவை அரசனுக்கு பரிமாறினான். இருந்தாலும் அரசன் தவசுவை மன்னிக்க தயாராக இல்லை.

வழக்கம்போல அரச சபையை அரசன் கூட்டினான். சமையல் கலைஞன் தவசுவை குற்றவாளி கூண்டில் ஏற்றினான்.

அப்போது தவசு, அரசே எனக்கு வயதாகிவிட்டது. ஞாபக மறதியால் உணவில் உப்பு போட மறந்துவிட்டேன். அது தவறுதான்.

short story 5 மனிதனை விட மிருகம் மேலானது

40 ஆண்டுகளாக உங்கள் இல்ல சமையல் கலைஞனாக இருந்து வந்திருக்கிறேன். எனக்கு குறைந்த தண்டனை தாருங்கள் என வேண்டினான்.

அரசன், தவசுவின் குற்றத்துக்கு குறைவான தண்டனை தர தயாராக இல்லை. தவசுவை சிங்கத்துக்கு இரையாக்க உத்தரவிட்டான்.

சிங்கக் கூண்டுக்குள் தவசு

தவசு எவ்வளவோ மன்றாடி கேட்டும் பலனில்லை. காவலர்கள் தவசுவை பாதாள அறைக்கு அழைத்துச் சென்று சிங்கம் இருந்த கூண்டுக்குள் தள்ளினார்கள்.

தினமும் சிங்கத்துக்கு பாதாள அறையை நோக்கி மாமிச துண்டுகளை வீசும் காவலன், சமையல் கலைஞர் தவசுவை பாதாள அறையில் தள்ளிய பிறகு அதன் கர்ஜனை கேட்கவில்லை என்பதால் அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவன் பாதாள அறைக்குள் மிகுந்த அச்சத்தோடு இறங்கி சிங்கம் இருக்கிறதா என பார்க்கப் போனான்.

அது ஒரு மேடையில் சமையல் கலைஞர் தவசு மடியில் படுத்திருக்க, அதன் தலையை அவர் தடவிக்கொடுத்தபடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

வேகமாக பாதாள அறையை விட்டு வெளியேறி அரசனிடம் ஓடோடி வந்தான். அரசே… என் கண்ணை என்னாள் நம்ப முடியவில்லை.

சிங்கம் சமையல் கலைஞர் தவசுவை தன்னுடைய இரையாக்கிக் கொள்ளவில்லை. தவசு உயிரோடு பாதாள சிறையில் இருக்கிறார்.

அவரது மடியில் சிங்கம் படுத்திருக்கிறது என்று நெஞ்சு படபடக்க சொன்னான். இதை அரசனாலும் நம்ப முடியவில்லை.

அதிர்ந்து போன அரசன்

சிங்கம் எப்படி தவசுவை விட்டு வைத்தது என்ற ஆச்சரியம் மேலிட, அரசன் பாதாள அறைக்கு சென்றான்.

அங்கு கம்பிகளுக்கு அப்பால் சமையல் கலைஞர் தவசு சிங்கத்தோடு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிசயித்தார்.

சமையல் கலைஞரை அருகே அழைத்த அவர், எப்படி சிங்கம் உன்னோடு உறவாடுகிறது என்று கேட்டார்.

நான் உங்கள் தந்தை உயிரோடு இருக்கும்போது இந்த பாதாள அறைக்கு வந்திருக்கிறேன். அப்போது இது மிகச் சிறிய குட்டியாக இருந்தது.

அதை சில நாள்களுக்கு நான் பராமரித்து வந்தேன். அதன் பிறகு அதனுடைய மூர்க்க குணத்தைக் கண்டு இந்த பாதாள அறைக்குள் அடைத்தார்கள். அதன் பிறகு நான் இதை பார்க்கவில்லை.

நன்றி மறவாத மிருகம்

என்னை காவலர்கள் பாதாள அறைக்குள் தள்ளியபோது, அருகில் வந்த சிங்கம், பழைய நினைவுகளுடன் என்னை கொஞ்சி விளையாடியது.

ஒரு வாரமாக அதற்காக மேலிருந்து வீசப்படும் இறைச்சியை பக்குவப்படுத்தி கொடுத்து வருவதை அமைதியாக சாப்பிடுகிறது.

அது மிருகமாக இருந்தாலும், மனிதனைப் போல் நன்றி கெட்டு நடந்துகொள்ளவில்லை என்று சொன்னான் தவசு.

அரசன் தன்னுடைய தவறை உணர்ந்து அவனை விடுதலை செய்தான். அத்துடன் இனி எனக்கு சமையல்காரனாக இருக்க வேண்டியதில்லை.

இந்த சிங்கத்தை வெளியில் கொண்டு வருகிறேன். அதை பராமரிப்பவனாக இரு போதும் என்று சொல்லி பொன்னும், பொருளும் வாரிக் கொடுத்தான் அரசன்.

எல்லாம் கடந்த நிலை எது?

கிரிக்கெட் வெற்றிக்கு அடித்தளமிட்டவர் இவர்

73 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *