தமிழிசையை சந்தித்த அண்ணாமலை

அண்ணாமலை பாஜக
68 / 100

பஞ்சாயத்து முடிந்தது

சென்னை; தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜனை அவரது இல்லத்துக்கு ஸ்வீட் பாக்ஸுடன் சென்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
தமிழக பாஜகவில் தேர்தல் முடிவுகள் வந்ததும் சலசலப்பு ஏற்பட்டது. இது வழக்கமாக எல்லா கட்சிகளிலும் காணப்படும் பலவீனம்தான். அது பாஜகவிலும் தோன்றியது.

தேர்தலில் தமிழிசை சௌந்திரராஜன் தோல்வியை சந்தித்தப் பிறகு ஊடகங்களிடம் அவர் பேசும்போது ஒருசில கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினார்.

தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனதற்கு சரியான கூட்டணி அமைக்காமல் போனதுதான். ஒருவேளை பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் பல இடங்களை தமிழகத்தில் கைப்பற்றியிருக்கும் என்று கூறினார்.

இது மறைமுகமாக அதிமுக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையே காரணம் என்பதாக சூசகமாக அவர் தெரிவித்தது அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.


அத்துடன், தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பேட்டியில், எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. நான் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தபோது சிலரை கட்சிக்குள் அனுமதிக்கவில்லை.

அதாவது சமூக விரோத ரௌடிகள் போல் இருப்பவர்களை கட்சிக்குள் விடவில்லை. ஆனால் இப்போது அப்படி அல்ல. கட்சியில் இப்போது ரௌடிகள் சேர்ந்திருக்கின்றனர் என்றும் கூறினார்.
இதனால் அண்ணாமலை தரப்புக்கும், தமிழிசை சௌந்தரராஜன் தரப்புக்கும் சமூகவலைதளங்களில் மோதல் போக்கு நீடித்தது.

இனி கண்ட இடத்தில் பேட்டி இல்லை-அண்ணாமலை

இந்த நிலையில் திடீரென தில்லிக்கு சென்ற அண்ணாமலை திரும்பி கோவைக்கு வந்தார். அப்போது நி்ருபர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, நான் இனி செய்தியாளர்களை கோவை அலுவலகத்தில் மட்டுமே சந்திப்பேன். கட்சியில் எல்லாவற்றையும் முறைப்படுத்தவுள்ளோம்.
இனி தலைவர்கள் யாரும் பாத்ரூம் போகும்போதும், வெளியில் வரும்போதுமெல்லாம் பேட்டி கொடுக்க மாட்டார்கள் என்று சொல்லிச் சென்றார்.

அண்ணாமலை தமிழிசை விவகாரத்தில் அமித் ஷா

அமித் ஷா என்ன சொன்னார்?

இந்த நிலையில், ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் விழாவுக்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிர்பாராத ஷாக்கை அமித் ஷா கொடுத்தார்.
அங்கே மேடையில் இருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு திரும்பிய தமிழிசை சௌந்தரராஜனை அழைத்த அமித் ஷா, அவரிடம் ஏதோ கைகளை அசைத்து காரசாரமாக பேசினார். இது அனைத்து ஊடகங்களிலும் பல யூகங்களுடன் செய்திகளாக வெளி வந்தன.
அந்த அளவுக்கு, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அமித்ஷா சைகைகள், முகபாவங்கள் எல்லோருக்குமே புரிய வைத்தது.
தமிழிசை சௌந்தரராஜனை அருகில் அழைத்த அமித் ஷா, கட்சி விவகாரங்களை வெளிப்படையாக பேசக் கூடாது. தற்போதைய தலைமையை ஏன் விமர்சித்தீர்கள் என அவர் கேட்டிருக்கலாம்.
அதற்கு தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தோல்விக்கான பொதுவான காரணங்களையே தான் பேசியதாகவும், இதில் யாரையும் தவறாக பேசவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கலாம்.

யூகச் செய்திகள் என்ன சொல்கின்றன

அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த அமித்ஷா, முதலில் நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் பேசாதீர்கள். கட்சித் தலைமை இருக்கும்போது நீங்கள் ஏன் பேட்டி அளிக்கிறீர்கள். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தும்.
இனி நீங்கள் உள்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசக் கூடாது என்று அவர் கண்டித்திருக்கலாம். அதற்கு சரி என்று தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துவிட்டு நகர்ந்திருக்கலாம் என்ற யூக செய்திகள் பரவின.
அத்துடன், பதவி ஏற்பு விழாவை அடுத்து சென்னை திரும்பிய தமிழிசை சௌந்தரராஜனை பத்திரிகையாளர்கள் அணுகியபோது, பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றதும் இந்த தகவலை ஓரளவுக்கு ஊர்ஜிதப்படுத்தியது.
இந்த நிலையில், அமித்ஷா கட்சி ரீதியாக சில அறிவுறுத்தல்களைத்தான் தன்னிடம் கூறியதாக தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்து ஊடகங்களின் யூகங்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு ஆசிர்வாதம்


அண்ணாமலை மேலிடத்தின் ஆசிர்வாதத்துடன் தமிழக பாஜக தலைவராக வந்தவர். அவர் மீது கடந்த காலங்களில் அவர் மீது புகார் தெரிவிக்கப்போய் வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள் பலர்.

கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்களும் ஏராளம். பொதுவாக அண்ணாமலையைப் பற்றி யார் புகார் தெரிவித்தாலும், அதை மேலிடத்தில் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

யார் புகார் தெரிவித்தார்களோ அவர்களே அதிக பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அந்த பட்டியலில் இப்போது தமிழிசை சௌந்தரராஜன் சேர்ந்திருக்கிறார்.
ஊடகங்கள் பல்வேறு யூகங்களை அடுக்கி வந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் அண்ணாமலை சென்று பார்த்து வந்தார்.

அத்துடன் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, அமித் ஷா எல்லோரையும் குடும்ப உறுப்பினர்களாக நினைப்பவர்.

அவர் அன்பாகத்தான் கட்சியினரிடம் பேசுபவர். அவர் அன்போடும், அரவணைப்போடும்தான் தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசியிருக்கிறார். இதில் மற்றவர்கள் நினைப்பதுபோல் எதுவும் இல்லை.
தமிழிசை சௌந்தரராஜன் பாஜக வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது உழைப்பு பாஜகவுக்கு என்றைக்கும் தேவைப்படுகிறது என்று சொல்லி கட்சியின் உள்பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அண்ணாமலை.

68 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *