குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 20) இடுக்கண் களைவதே நட்பு என்ற தலைப்பிலான சிறுகதையும், குறளும் இடம்பெறுகிறது.
தர்மரும், விமலரும் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, ஆனந்தன் தன் நண்பன் அருணுடன் வந்தான்.
என்ன ஆனந்தா என்றார் தர்மர். நாங்கள் நல்ல நட்பு குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக உங்களின் கருத்தை சொல்லுங்களேன் என்றான் ஆனந்தன்.
ஆனந்தா முதலில் நட்பின் அடிப்படையை புரிந்துகொள்.
நட்பின் அடிப்படை எதுவெனில், மற்றவர்களுக்கு மனம் தளராமல் உதவி செய்வது. அதாவது முடிந்த அளவுக்கு மற்றவருக்கு உதவி புரிதல் வேண்டும்.
அப்படி தான் பெற்ற உதவியை நினைத்து பார்க்கும் ஒருவன், நட்பின் பெருமை உணர்ந்து அந்த நட்பில் இருந்து விலகாமல் இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறான்.
அத்துடன் அவன் ஆபத்து காலங்களில், தான் எப்படியாகினும் பிறருக்கு உதவி புரிய வேண்டும் என்ற மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்கிறான்.
ஒருவனுடைய ஆடை அவனின் உடலில் இருந்து நழுவும்போது, எப்படி அவனுடைய கரங்கள் செயல்பட்டு உதவுகிறதோ அதுபோல நண்பனுக்கு துன்பம் நேரிடும்போது அதை களைவதற்கு உதவி புரிய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
(குறள்-788)
இத்தகைய நட்பின் சிறப்பை உணர்த்த ஒரு சிறுகதையும் சொல்கிறேன் கேள்.
ஒரு காட்டில் கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளியும், கண் பார்வையற்ற திறனாளியும் சென்று கொண்டிருந்தார்கள்
அப்போது திடீரென காட்டில் தீப்பற்றிக் கொண்டது. கால் ஊனமுற்றவர் எதிரே என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார்.
கண் பார்வையற்றவருக்கு எதிரில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இதனால் கால் ஊனமுற்றவர் எதிரே காடு தீப்பற்றி எரிவதை கண் பார்வையற்ற தன் நண்பருக்கு சொல்கிறார்.
ஊனமுற்றவரால் ஓட முடியாது. கண் பார்வையற்றவரால் எதிரில் உள்ள பொருள்களை பார்க்க முடியாது. இப்போது இருவருமே காட்டுத் தீ பரவிய இடத்தில் சிக்கிக் கொண்டார்கள்.
கால் ஊனமுற்ற நண்பர் சொன்னார். நாம் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டால் மட்டுமே இந்த காட்டுத் தீயில் இருந்து தப்பிச் செல்ல முடியும்.
அதனால் நான் சொல்வதை கேட்பீர்களா என்று கண் பார்வை அற்றவரிடம் கேட்டார் கால் ஊனமுற்றவர்.
நீங்கள் சொல்லுங்கள் நான் செய்கிறேன் என்றார் கண் பார்வையற்றவர்.
உடனே என்னை உங்கள் முதுகில் தூக்கிக் கொள்ளுங்கள். நான் வழி காட்டுகிறேன். காட்டுத் தீயில் இருந்து தப்பிவிடலாம் என்றார் ஊனமுற்றவர்.
இருவரும் சமயோஜிதமாக ஒருவருக்கொருவர் உதவி அந்த காட்டுத் தீயில் இருந்து தப்பி வெளியேறினார்கள்.
யாரிடம் யாசிக்கக் கூடாது – திருக்குறள் கதை 19
துன்பம் வரும்போது நட்புகளிடையே ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும்போது இருவருமே துன்பங்களில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும். இப்போது புரிகிறதா நட்பின் பயன் என்றார் தர்மர்.
தாத்தா இப்போது எங்களுடைய கட்டுரைக்கான தலைப்பு கிடைத்து விட்டது. நாங்கள் இப்போது தயாரிக்க செல்கிறோம் என்று நண்பனுடன் விடைப் பெற்றுச் சென்றான் ஆனந்தன்.