Read in English / பிற மொழிகளில் படிக்க:
(காலை நேரம். நாயர் கடையில் சுடச்சுட டீ கொதித்துக் கொண்டிருக்கிறது. கையில் நாளிதழுடன் கதர்வேட்டி கந்தசாமியும், வழக்கமான உற்சாகத்துடன் வாய்ப்பந்தல் வைத்தியும் பெஞ்சில் அமர்ந்து அதிரடி கூட்டணி பற்றி பேசத் தொடங்கியபோது, வாட்டமான முகத்துடன் நாயர் இருவருக்கும் டீயை கொடுத்தபடியே இன்றைய அரசியலை தொடங்கி வைத்தார்)
(இது நடப்பு அரசியல் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக அலசும் நாயர் கடை நையாண்டி பகுதி)
-:பந்து மித்திரன்:-

கவலையை விட நாயரே
என்னங்க வைத்தி… சென்னையில சிலிண்டர் தட்டுப்பாடு ரொம்ப அதிகமாகிட்டே போகுது. ஹோட்டல் எல்லாம் மூடப் போறாங்கனு பேப்பர்ல போட்டிருக்கான். எனக்கு அதிர்ச்சியா இருக்கு… நம்ம கடைக்கும் அந்த நிலைமை வந்துடுமோன்னு பயமாவும் இருக்கு என்றார் நாயர்.
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsநாயரே! சிலிண்டர் தட்டுப்பாடாவது பரவாயில்லை, காத்துக்கிடந்தா கிடைச்சிடும். இல்லாட்டி அடிக்க வேண்டியதை அடிச்சா ஈஸியா கிடைச்சிடப் போவுது இதுக்கு போயி கவலைப்படுறீங்க… அதை வுடுங்க.. எனக்கு வேற கவலை என்றார் வாய்ப்பந்தல் வைத்தி.
இதேக் கேட்ட நாயர், உங்களுக்கு என்ன கவலை.. அப்படி…
சம்மன் ஷாக்
‘விசில் ஊதுபவர்’ பனையூர்ல எம்.எல்.ஏ சீட்டுக்காக ஆட்களை நேர்காணல் பண்ணி வடிகட்டிட்டு இருக்காரு… ஆனா அவருக்கு டெல்லியில இருந்து மத்திய விசாரணை அமைப்பு வழியா கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பி பெரிய ஷாக் கொடுத்திருக்காங்களே! அத சொல்றேன் என்று பீடிகை போட்டார் வாய்ப்பந்தல் வைத்தி.
ஐயா, ஆள விடுங்க… அங்க சுத்தி இங்க சுத்தி அரசியலுக்கு வரலேன்னா உங்களுக்கு தூக்கம் வராதே… நான் என் பொழப்பை கவனிக்கிறேன்…(மெல்ல நகர்ந்து கடைக்குள் சென்றார் நாயர்)
சினிமா வேகத்தில் மகன்
வைத்தி… சம்மன் ஷாக் ஒரு பக்கம் இருக்கட்டும். விசில் ஊதுபவருக்கு அவர் வீட்டுக்குள்ளேயே பெரிய செக் வைக்கப்பட்டிருக்கு தெரியுமோ என்றார் கதர்வேட்டி கந்தசாமி சிரித்துக்கொண்டே.
‘விசில் ஊதுபவர்’ ஒரு பக்கம் கட்சி வேலை, நேர்காணல்னு பிஸியா இருக்காரு. ஆனா அவரோட வாரிசு, அதாவது மகன், இப்போ சினிமால டைரக்டர் அவதாரம் எடுத்து படப்பிடிப்பு வேலைகள்ல படு பிஸியா இருக்காரு.
சமீபத்துல அவருடைய குழு புகைப்படம் இப்போ இணையத்துல செம வைரல்! அப்பா அரசியல்ல வேகம் காட்டுறாரு, மகன் சினிமாவுல வேகம் காட்டுறாரு பாரு!
இதை படித்துவிட்டீர்களா? – நாயர் கடை அரசியல்: அலறும் மாஜிக்கள்!
வாய்ப்பந்தல் வைத்தி: ஆமாம் கந்தசாமி அண்ணே.., அது பெரிய பரபரப்புதான்! ஆனா விசாரணை அமைப்போட சம்மன் விசில் ஊதுபவருக்கு மட்டுமில்ல… கரூர்க்காரரான ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சருக்கும் மத்திய விசாரணை அமைப்போட சம்மன் போயிருக்காம். அடுத்தடுத்து சம்மன் பறக்குறத பார்த்தா அரசியல் களம் இன்னும் சூடாகும் போலிருக்கே!
கதர்வேட்டி கந்தசாமி: அரசியல் மட்டுமில்ல வைத்தி, சினிமா களமும் சூடாத்தான் இருக்கு. தென்னிந்தியாவின் முன்னணி நடிகைக்கும், வித்தியாசமான கோணத்தில் படங்களை எடுக்கும் இயக்குனருக்கும் நடுவுல பெரிய பஞ்சாயத்தே ஓடிட்டு இருக்கு. இந்த விவகாரத்துல தாமரை கட்சியின் ‘ராம’ எனப் பெயர் தொடங்கும் மூத்த நிர்வாகி வேற கருத்து சொல்லியிருக்காரு. முன்னாடி சினிமா அரசியலுக்குள்ள வந்தது… இப்போ அரசியல் சினிமாவுக்குள்ள வந்துட்டு.!
நாயர்: நானும் இந்த அரசியல் பேச்சை காதுல வாங்காம வேலை பாக்கனும்னு பாக்குறேன். முடியலே… ஆமாம். நம்ம ஆளும் கட்சி அடுத்த தேர்தலுக்கு என்னதான் பிளான் பண்றாங்க?
வாய்ப்பந்தல் வைத்தி: ஆளும் கட்சி என்ன சும்மாவா இருக்கு? தேர்தலுக்கு கூட்டணியை இன்னும் பலமாக்கப் போறாங்களாம். சீட் ஒதுக்குறதுல சில கட்சிகளுக்கு அதிருப்தி இருந்தாலும், தாமரை கட்சி அந்த கட்சிகளை சிறைப்பிடிக்கிறது முன்னாடி அவங்களை உள்ளே இழுக்க பெரிய மாஸ்டர் பிளான் போடுறாங்கப்பா!
கதர்வேட்டி கந்தசாமி: அதனாலதான் ஆளும் கட்சித் தலைவர், ‘நாங்க மறுபடியும் ஆட்சிக்கு வந்தால்தான் உரிமைத் தொகை போன்ற நலத்திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து கிடைக்கும்’னு இப்போதே அதிரடியா தேர்தல் பிரச்சார பாணியில பேச ஆரம்பிச்சிருக்கார்…
வாய்ப்பந்தல் வைத்தி: அரசியல்னா அப்படிதான் இருக்கும் அண்ணே… ‘சேலத்துக்காரர்’ கூட சும்மா இல்ல. ஆளும் கட்சி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாத்துறாங்க, சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போச்சுனு செமையா விளாசுறாரு. தாமரை கட்சியும் தமிழ்நாட்டுல பயங்கரவாதம் வளருதுனு ஆளும் நிர்வாகத்தைக் கடுமையா அட்டாக் பண்றாங்க. ஆனா, இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டிய, ஓ-வில் பெயர் தொடங்கும் நபர் அமைதியா எப்போதும்போல வேடிக்கை பாக்குறாரு!
கதர்வேட்டி கந்தசாமி: இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்… டெல்லி பெரியவர் நாகர்கோவிலில் இருந்து சார்லப்பள்ளிக்கு காணொளி மூலமா ‘அம்ரித் பாரத்’ புது ரயிலை தொடங்கி வச்சுட்டாரு. அதே மாதிரி மதுரை விமான நிலையத்தையும் சர்வதேச தரத்துக்கு மாத்த டெல்லி அமைச்சரவை பச்சைக் கொடி காட்டிடுச்சு! நம்ம ஊருக்கு நல்லது நடந்தா சரிதான்.
இதை பாருங்கள்: Tamil Nadu Election 2026: வடக்கு மண்டலம் யார் பக்கம் இருக்கு?
நாயர்: நல்லது நடக்கணும்னு ஆசைப்படுறோம். அதனாலதான், வளைகுடாவில் மாட்டியிருக்கிற நம்ம தமிழர்களையும் மீனவர்களையும் காப்பாற்றக் கோரி, ஆளும் கட்சித் தலைவர் டெல்லி பெரியவருக்கு ஒரு கடிதம் போட்டிருக்காரு போல. எல்லாம் சீக்கிரமா நல்லபடியா நடந்தா சரிதான்.
ஆனா நேத்து சென்னை பெரும்பாக்கத்துல நடந்த அந்த விபத்து செய்தி என் மனசையே உலுக்கிடுச்சு அண்ணே… டூ விலர்ல போன லாவண்யானு ஒரு 35 வயசு அம்மாவும், அவங்க 13 வயசு பொண்ணு இனியாவும் அந்த இடத்திலேயே உயிரை விட்டுட்டாங்க.
கதர்வேட்டி கந்தசாமி (பதற்றத்துடன்): ஆமாம் நாயரே, அந்தப் பொண்ணு எட்டாம் வகுப்பு படிக்குது. காலையில புள்ளைய பள்ளிக்கூடத்துல விடுறதுக்காக லாவண்யா இருசக்கர வாகனத்துல போகும்போது, வேகத்தடையில வண்டி ஏறி நிலைதடுமாறி ரெண்டு பேரும் கீழ விழுந்துட்டாங்க. அப்போ பார்த்து…
வாய்ப்பந்தல் வைத்தி (கோபத்துடன்): அப்போ பார்த்து பின்னாடி அதிவேகமா வந்த செங்கல் ஏத்துன லாரி அவங்க மேலயே ஏறி இறங்கிடுச்சு! இதுல கொடுமை என்ன தெரியுமா கந்தசாமி அண்ணே..? பள்ளிக்கூடம் தொடங்குற நேரத்துல, குடியிருப்புப் பகுதிகள்ல கனரக வாகனங்கள் வரக்கூடாதுன்னு ஒரு விதியே இருக்கு. ஆனா, இந்த லாரி எப்படி அந்த நேரத்துல உள்ளே வந்துச்சு?
கதர்வேட்டி கந்தசாமி: எல்லாம் போக்குவரத்து போலீஸாரோட அலட்சியம்தான் வைத்தி! குறிப்பா தாம்பரம் சரகத்துல ஹெல்மெட் இல்லன்னு ரோடு ஓரமா வண்டிய பார்க் பண்ண சொல்லி ஃபைனும் போடாம.. நீண்டநேரம் காக்க வைக்கும் போலீஸ்காரங்க பல பேர பாத்துருக்கேன்…
ஆனா… விதிமீறி வர்ற இந்த மாதிரி வாகனங்களை போலீஸ்காரங்க கண்டு்கிறதே இல்ல… காரணம் போக்குவரத்து போலீஸை பாத்ததுமே டிரைவர் கை ஜன்னலுக்கு வெளியே நீளுது. என்ன பண்ண சொல்ற… உயர் அதிகாரிகள் கண்காணிக்காம பொறுப்பில்லாம இருக்கிறதாலதானே இப்போ ரெண்டு உசுரு போயிருக்கு!
நாயர் (தீர்க்கமாக): இது சாதாரண விஷயமில்லய்யா. இதைப் படிக்கும்போதே பகீர்னு இருக்கு. இந்த விவகாரத்தை முதல்வர் நேரடி பார்வைக்கு யாராவது கொண்டு போகணும்.
போக்குவரத்துத் துறை போலீஸாருக்கு கடுமையான உத்தரவு போட்டு, இனிமேல் எந்த ஒரு தாய்க்கும், குழந்தைக்கும் இந்த நிலைமை வராம தடுக்கணும். அதுதான் அந்த உசுருகளுக்கு நாம செய்யுற உண்மையான அஞ்சலி!
வாய்ப்பந்தல் வைத்தி: உண்மைதான் நாயரே! அரசியல் விவாதங்கள் ஒரு பக்கம் சுவாரஸ்யமா இருந்தாலும், சாமானிய மக்களின் உயிரும் பாதுகாப்பும் ரொம்ப ரொம்ப முக்கியம். முதல்வர் இதுல கண்டிப்பா ஆக்ஷன் எடுப்பார்னு நம்புவோம்.
(சூடான டீயை உறிஞ்சியபடியே இருவரும் நாளிதழை மடித்து வைத்துவிட்டு நடையைக் கட்டுகிறார்கள். நாயர் கடை அரசியல் விவாதம் நாளையும் தொடரும்…)
இதை பார்த்து விட்டீர்களா… இப்போது யார் கூட்டணி பலமா இருக்கு… மண்டலங்கள் வாரியாக அலசல்
(Disclaimer: இது முழுவதும் கற்பனையான நையாண்டி உரையாடல். எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, அரசியல் கட்சியையோ புண்படுத்தும் நோக்கத்திலோ, களங்கப்படுத்தும் நோக்கத்திலோ எழுதப்பட்டதல்ல. அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவை கண்ணோட்டத்துடன் அணுகும் ஒரு முயற்சி மட்டுமே. இதில் கூறப்பட்டுள்ள அதிரடி கூட்டணி – சம்மன் ஷாக் உள்ளிட்ட தகவல்கள் பொதுவெளியில் உலா வரும் தகவல்கள் செய்திகளின் அடிப்படையிலானவை. அதனால் இந்த உரையாடல் ரசிக்க மட்டுமே)

மித்திரன் நியூஸ் வாசகர்களின் உற்ற தோழனாகவும், நலம் விரும்பும் உறவாகவும் (பந்து மித்திரன்) அரசியல் களத்தின் உண்மை நிலவரங்களை நாயர் கடை பெஞ்சில் சுடச்சுட அலசும் மூத்த பத்திரிகையாளர்
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்